உணவு - Fast Food






Fast Food உணவு பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைய நிலையில் எந்த ஒரு வளரும் பருவ மாணவரிடமும், பிடித்த உணவு எது என்று கேட்டால் நமக்கு அதிர்ச்சியே மிஞ்சும்.

பலரும் தங்களுக்கு பிடித்த உணவாக பீசா, பஸ்டா, வடா பாவ், பாவ்பாஜி, நூடுல்ஸ் மற்றும் ப்ரைட் ரைஸ் போன்ற உணவு வகைகளையே சொல்வார்கள். இந்த உணவு வகைகள் பயனற்ற உணவுகள் அல்லது ஆங்கிலத்தில் "ஜன்க் புட்" என்று அழைக்கப்படுகின்றன. இத்தகைய உணவு வகைகளில் ஒன்றுகூட பயனுள்ள மற்றும் சத்துள்ள உணவுப் பொருள் கிடையாது என்பதை மாணவ சமுதாயம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

இதுபோன்ற பயனற்ற உணவுகள்(ஜன்க் புட்) பார்ப்பதற்கு நன்றாகவும், சாப்பிடுவதற்கு சுவையாகவும், நாகரிகமாகவும் இருக்கலாம். ஆனால் அவற்றால் உடலுக்கு நேரும் தீமைகளைப் பற்றி தெரிந்துகொள்வது அவசியம். அந்தவகை உணவுகள் செரிமானம் ஆவது மிகவும் கடினம்.

செரிமான அமைப்பு அல்லது மூளை ஆகியவற்றுக்கு சீரான ரத்தம் கிடைக்க வேண்டுமெனில் உங்களின் உடல் நன்றாக இயங்க வேண்டும். இதனால்தான் நன்றாக சாப்பிட்டவுடன் தூங்க வேண்டும் என்ற உணர்வு உங்களுக்கு ஏற்படுகிறது. அந்த உணர்வு ஏற்படுவதால் உங்களால் படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை.

பயனற்ற உணவுகள்(ஜன்க் புட்) செரிமானம் ஆவதற்கு நீண்டநேரம் எடுத்துக் கொள்கின்றன. மேலும் அவை உங்களின் செரிமானப் பாதையில் தங்கி விடுகிறது. இதனால் உங்களுக்கு அசிடிட்டி, சோம்பேறித்தனம் மற்றும் பருக்கள்(பிம்பிள்ஸ்) போன்றவை ஏற்படுகின்றன. மேலும் அதனால் ஏற்படும் மிக மோசமான விளைவு என்னவெனில், உங்களின் கவனிப்பு திறன் பாதிப்படைவதுதான்.

அந்த உணவுகள் உங்களின் ஜீரண அமைப்பில் எரிச்சலை உண்டாக்குகிறது. அந்த உணவுகளில் சேர்க்கப்படும் பொருட்களின் தரம் சரியானதல்ல. அந்த உணவுகளால் உங்களுக்கு எந்த கலோரியும் கிடைப்பதில்லை மற்றும் வைட்டமின் சத்துக்களும் கிடைப்பதில்லை. மேலும் இத்தகைய உணவுகளால் மலச்சிக்கலும் உண்டாகிறது.

மாணவர்கள் இத்தகைய உணவுகளை காலை உணவாக அதிகம் உட்கொள்கிறார்கள். பல சமயங்களில் அவை ஜீரனமாகிவிட்டாலும், சில சமயங்களில் பிரச்சினையாகி விடுகின்றன. இதனால் அன்றைய முழு நாளும் அவஸ்தைப்பட வேண்டியுள்ளது. தேர்வு நேரங்களில் மாணவர்கள் இது விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நமது பாரம்பரிய உணவுகளான இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, உப்புமா அல்லது சிறிதளவு சாதம் போன்றவையே பிரச்சினையற்ற உணவுகள். தேர்வு சமயங்களில் இவையே உகந்தவை.

சமைப்பதற்கு எளிதாகவும், சாப்பிடுவதற்கு ருசியாகவும் இருந்தால் மட்டும் ஒரு உணவு நல்ல சத்தான மற்றும் பிரச்சினையற்ற உணவாகிவிடாது. தேர்வு சமயங்களில் படித்தலோடு சேர்ந்து, உணவு விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் உங்களின் திட்டமெல்லாம் வீணாகிவிடும்.


No comments:

Post a Comment